Sunday, January 30, 2022

அருச்சுனனின் தெளிவற்ற நிலை

ஓம் சிறி சாயி ராம்.

இவ்வுலகத்தைக் கர்மஷேத்திரம் என்றும் கீதைவாகினியில் குறிப்பிட்டுள்ள பகவான்,
உலகில் பிறவியெடுத்த அனைவரும் கர்மமாற்றவேண்டியதைத் தவிர்க்க முடியாதென்றும், அதேவேளை, தாம் செய்யும் கர்மங்களின் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டுமென்றும் பகவான் கூறுகிறார்.

பலனை எதிர்பார்த்துச் செய்யும் கருமங்கள் அவற்றுக்கேற்ப நற்பலனையோ தீப்பலனையோ உருவாக்குவதால் அவற்றுக்கான பலன்களைக் கருமமாற்றுபவரே‌ அனுபவிக்கவேண்டிவரும்.

அதேவேளை, பலனை எதிர்பார்க்காமல் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்யும் கருமங்களின் பலன்கள் இறைவனையே சென்றடையும்.

இதனை எடுத்துரைத்த கண்ணபிரான், சத்திரியனான அருச்சுனன் சத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
பகவானுக்கு அர்ப்பணமாகச் செய்யும் அவனது கருமங்கள் அனைத்தின் பலன்களும் கருவியான அருச்சுனனை ஒருபோதும் பாதிக்காது என்பதையும் வலியுறுத்தினார்.

பகவான் ஆணித்தரமாக இவற்றை எடுத்துரைத்த போதிலும், அருச்சுனனின் சந்தேகங்கள் முழுமையாகத் தீரவில்லை. அவன் தொடர்ந்தும் நிச்சயமற்றதும்‌ சலனம் நிறைந்த மனதுடனேயே தொடர்ந்தம்
கண்ணபிரானுடன் உரையாடுகிறான்

கண்ணபிரானினா வார்த்தைகளால் ஓரளவு தெளிவு பெற்றபோதிலும் அவனது சந்தேகங்கள் முழுமையாக நீங்கவில்லையென்பது கீதோபதேசத்தின் இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கீதோபதேசத்தின் இறுதி வரை அவன் பூரண சரணாகதி அடையவில்லை என்றும் கண்ணபிரான் தனது உண்மைத் தோற்றத்தைத் தனது விஸ்வரூப தரிசனத்தின் மூலம் காட்டிய பின்னரே அருச்சுனன் முழுமையாகத் தெளிவுபெற்று யுத்த சன்னத்தனானான் என்பதையும்  கீதையின் 18 ஆவது அத்தியாயம் நமக்கு உணர்த்துகிறது.

ஓம் சிறி சாயி ராம்..

Saturday, January 29, 2022

கீதோபதேசம்பெற பகவான் அருச்சுனனைத் தேர்ந்தெடுத்த காரணம்

ஓம்  சிறி சாயி ராம்.

எதிரணியில் தம்மையெதிர்த்துப் போர்புரியத் தயாராக இருந்த அனைவரையும் பார்வையிட்டபின் காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உடகார்நாதிருந்த அருச்சுனனைப்பார்த்துக் கண்ணபிரான் கேட்டார்,  "அர்ச்சுனா, நீ இதுவரை எத்தனை போர்களில் ஈடுபட்டு எத்தனைபேரைக் கொன்றிருக்கிறாய். அப்போது வராத தயக்கம் தற்போது ஏற்பட்டதற்கான காரணத்தை யோசித்துப் பார். இதுவரை உன்னால் கொல்லப்பட்ட அனைவரும் உனது உறவினர்களல்லவென்றும், தற்போது உன்னை எதிர்த்து நிற்போர் உனது உறவினர்களும் உன்னால் பூசிக்கப்பட வேண்டியவர்கள் என்னும் மாயையும் உன்னை மயக்குவதால்  போரிலிருந்து பின்வாங்க நினைக்கிறாய். யார் உனது உறவினர்? யார் உனது மரியா தைக்குரியவர்கள்? 

நீ இப்போது போர் புரியவிருப்பது அநீதிக்கெதிராகவே. அநீதியை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவதே உனது கடமை. எனவே துணிவுடன் எழுந்து போரிடு" என்றும் தூண்டினார்.

அப்போது  தர்மத்தின் வடிவமான தருமருக்கோ, வீரத்துக்கும் பலத்துக்கும் வடிவமானவனும் தனது கதாயுதத்தின் ஒரேவீச்சில் எதிரிகளைத் துவம்சம் செய்யும் பராக்கிரமம் கொண்ட பீமசேனனுக்கோ அன்றி சகல அறிவும் பெற்ற  பிதாமகரான பீஷ்மருக்கோ உபதேசிப்பதைத் தவிர்த்து கீதோபதேசத்தை பகவான் தனக்கு ஏன் வழங்குகிறார் என்னும் சந்தேகம் அருச்சுனனின் மனதில் எழுந்தது.

பிதாமகர் பீஷ்மர் சகல தர்மங்களை அறிந்திருந்தாலும், பாரதப்போரில் அநீதியின் பக்கத்துக்கே   தலைமை தாங்குகிறார். அவரது குரலும் எண்ணமும் தர்மத்தைச் சார்ந்து இருந்தாலும் அவரது செயல் அதர்மத்துக்கே துணை நிற்கிறது. எனவே அவர் திரிகரண சுத்தியை இழந்து விட்டார். எனவே கீதோபதேசத்தைப் பெறும் தகுதியையும் உரிமையையும் அவர் இழந்து விட்டார்.

தருமராஜன் தர்மத்தைக் கடைப்பிடித்த போதிலும் விளைவைப் பற்றிச் சிந்திக்காமல் செயலாற்றி விட்டுப் பச்சாத்தாபப் படுபவர்.
திருதராஷ்டிரன் கபடத்தனமாகச் சூதாட அழைத்தபோது, சூதாட்டம் தர்மத்துக்கு முரணானது என்று நன்கு அறிந்திருந்தும் சூதாடச் சம்மதித்தவர்.
அதுமட்டுமல்லாமல், தனக்குப்பதிலாகச் சூதாட மாமன் சகுனியைத் துரியோதனன் நியமித்தபோதிலும் , சூதாட்டத்தில் திறமையற்ற தர்மராஜர், கண்ணபிரான் சூதாட்டத்தைப் பற்றி அறிந்துவிடக்கூடாதென்றும், அவர் சூதாட்டத்தில் தலையிட்டுவிடக் கூடாது என்றும் மனதில் நினைத்திருந்தார். கண்ணபிரான் சூதாட்ட மண்டபத்தின் வெளியே தர்மராஜனுக்கு உதவ அவரது  அழைப்புக்காகக் காத்திருந்த போதிலும் சூதாட்ட மண்டபத்துக்குள் பகவான் நுழைந்துவிடக்கூடாது என்றே தருமர் நினைத்துக் கொண்டிருந்தார்.

எனவேதான் கண்ணபிரானின் உற்ற தோழனும், மைத்துனனும் பரம பக்தனுமான அருச்சுனனைக் கீதோபதேசம் பெறும் தகுதியுள்ளவராக் கண்ணபிரான் முடிவெடுத்து இருந்தார்.

ஓம் சிறி சாயி ராம்.

Friday, January 28, 2022

நமது உடலெனும் தேரின் சாரதியே பரந்தாமன்

ஓம் சிறி சாயி ராம்

தர்மஷேத்திரம் மற்றும் குருஷேத்திரம் பற்றி சாயி பகவான் தனது கீதை வாகினியில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதப்போர் நடைபெற்ற இடத்தைத் தர்மஷேத்திரம் எனக் குறிப்பிட்டுள்ள பகவான், யாகங்கள் போன்ற  பல‌ புனிதமான சம்பவங்கள் அங்கு நடைபெற்றதால் அது தர்மஷேத்திரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
குரு வம்சத்தவரால் ஆட்சி செய்யப்பட்டதால் குருஷேத்திரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாம் பிறக்கும்போது தீய தன்மைகள் இல்லாததால் நமது உடலும் தர்மஷேத்திரமே என்றும், நாட்கள் செல்லச்செல்ல கட்டுப்பாட்டை மீறி ஐம்புலன்களால் வழிநடத்தப்பட்டுத் தவறான பாதையில் மனமும் அதைத் தொடர்ந்து செல்வதால் பல தவறுகளில் உடலும் உள்ளமும்  இட்டுச் செல்லப்பட்டு உடல் குருஷேத்திரமாக மாறுவதாகவும் பகவான் குறிப்பிட்டுள்ளார்.

மனித உடலைத் தேருக்கு ஒப்பிடும் பகவான், ஐம்புலன்களைக் குதிரைகளாகவும், தேரில் அமர்ந்திருக்கும் குருவே கிருஷ்ணபரமாத்மா என்றும், அவரே இவ்வுடலென்னும் தேரின் சாரதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 தேரின் சாரதியான எம்பிரானே நிலையற்ற மாயை நிறைந்த உலக வாழ்வான பிறப்பு இறப்பெனும் சுழலிலிருந்து நம்மைக் காத்து நாம் சென்றடையவேண்டிய இடமான ‌இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்யும் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பகவான் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஓம் சிறி சாயி ராம்.

ஹம்ச காயத்திரியும் நாமஸ்மரணமும்.

ஓம் சிறி சாயி ராம்..

குழந்தை பிறக்கும் போது எவ்வித தீய குணங்களுமின்றியே பிறக்கிறது. பிறந்த குழந்தை குவா குவா என்று அழுவதாக நாம் சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் கோகம், கோகம் என்று அழுவதாக எம்பெருமான் கூறுகிறார்.

அதாவது குழந்தை நான் யார், நான் யார் என்றே அழுகிறது.

அதன் பின் சோகம் சோகம் என்றே சுவாசிக்க ஆரம்பிக்கிறது.
அதாவது " நான் இறைவன், நான் இறைவன்" என்றே ஒவ்வொரு சுவாசத்தின் போதும் தன்னையறியாமலேயே சொல்கிறது.
நாம் அனைவருமே நமது ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நம்மையறியாமலே நான் கடவுள், நான் கடவுள் எனறு சொல்லிக் கொண்டிருப்பதாக பகவான் சொல்கிறார்.

 சோகம் என்பது ஹம்ச காயத்திரி மந்திரம். நமது உட்சுவாசத்தின் போது சோ என்றும் வெளிச் சுவாசத்தின் போது ஹம்் என்றும் நம்மையறியாமலேயே நம்மால் உச்சரிக்கப்படுவதாகவும் பகவான் கூறுகிறார்.

எனவே ஒவ்வொரு சுவாசத்தின் போதும் நாம் சோ....ஹம்.... என்ற உணர்வுடன் வாழவேண்டுமென்று நமது சாயிநாதன் அருளுரைகளின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

எனவே பிறந்த நேரம் முதலே நாமும் இறைவனும் ஒருவரே என்பதை அறிந்தே இருக்கிறோம். ஆனால் வளர்ந்த பின் மாயையில் சிக்குண்டு, நிலையற்ற புற உலகக் கவர்ச்சி களில் சிக்குண்டு நாம் இறைவனிலிருந்து வேறுபட்ட வர்கள் எனும் உண்மையற்ற நிலையை நம்ப ஆரம்பிக்கிறோம்.

இக் கலியுகத்தில் மாயையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் இறைவனிலிருந்து வேறுபட்டவர்களல்ல, நாம் இறைவனின் வடிவங்களே  என்பதை உணர்வதற்கு நாமஸ்மரணமே இலகுவான ஒரேவழியென பகவான் கூறுகிறார்.

ஓம் சிறி சாயி ராம்.

Thursday, January 27, 2022

கீதை யாருக்காக உபதேசிக்கப்பட்டது.

ஓம் சிறி சாயி ராம்.

பகவத் கீதை பற்றிய தனது விளக்கத்தின் ஆரம்பத்தில்   கீதோபதேசம் யாருக்காக உபதேசிக்கப்பட்டது என்பதைப்பற்றி  நமது சாயிபகவான் விளக்கமளித்துள்ளார்..

பகவான் பகவத் கீதையைப் பற்றி விளக்கும் போது உபநிடதங்களைப் பசுவுக்கும், கீதையை உபநிடதத்திலிருந்து கறக்கப்பட்ட பாலுக்கும், அருச்சுனனைப் பசுவிலிருந்து பாலைக்கறக்க உதவும் கன்றுக்கும், பாலைக்கறக்கும் கோபாலனாகக் கண்ணபிரானையும் ஒப்பிடுகிறார். அவ்வாறு கறக்கப்படும் பாலான கீதை, அஞ்ஞானத்தில் மூழ்கிப் பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்போரைப் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து மீட்சிபெறப் பயன்படுத்தப்படவேண்டுமென்றும் கூறுகிறார். 
மேலும் அருச்சுனன் என்பதன் பொருள் தூய்மை, வெண்மை என்றும் சொல்கிறார்.
பகவத் கீதையைப்படிப்போர் மனத்தூய்மையுடனும் பக்திசிரத்தையுடனும் படித்து இறைவனை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தர்மஷேத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஷேத்திரமென்பதன் உட்பொருள் உடல் என்றும், குழந்தை பிறக்கும்போது தூய மனதுடன் படைக்கப் படுவதால் அந்நிலையில் அவ்வுடலே தர்மஷேத்திரம் என்றும் கூறுகிறார்.

ஓம் சிறி சாயி ராம்.
, ,

Wednesday, January 26, 2022

பிதாமகர் பீஷ்மரின் ஏமாற்றம்

ஓம் சிறி சாயி ராம்.

அருச்சுனன் காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டதையும் கிருஷ்ணபகவான் அருச்சுனனுடன் பேச ஆரம்பித்ததையும் கண்ட  இருதரப்புப் படையினருக்கும் உண்மைநிலை பரியவில்லை.

அருச்சுனன் தனது மாபெரும் படையைக் கண்டு பயந்து  யுத்தத்திலிருந்து பின்வாங்கி விட்டதாகத் துரியோதனன் நினைத்தான். வெற்றி தனக்கேயென்ற கற்பனையில் மிதந்தான்.

பகவானின் பக்தனான சஞ்சயன், அவரருளால் அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே நிகழவிருந்த யுத்தத்தை க் காணும் சக்தியைப் பெற்றுப் பிறவிக்குருடனனான திருதராஷ்டிரனுக்குப் போர்க்களத்தில் நிகழபவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அருச்சுனன் காண்டீபத்தை வீசியெறிந்து விட்டதையும் போர்புரிய‌மறுப்பதையும் சஞ்சயன் கூறக்கேட்ட‌ திருதராஷ்டிரன் தனது மகன் துரியோதனன் வெற்றிபெற்று விட்டதாக ‌எண்ணி மகிழ்ந்தான்.

களத்தில் கௌரவ சேனையின் சேனாதிபதியான பீஷ்மரோ, அருச்சுனனுக்குக்
 கண்ணபிரான் கூறுவதில் சில வார்த்தைகளாவது தனது செவிகளில் விழுந்து, அதன்மூலம் தனது பிறவிப்பயன் முழுமையடையாதா என‌ எம்பெருமானை‌ வேண்டிநின்றார்.
தர்மத்துக்கும்  அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் அதர்மத்துக்குத் தலைமை தங்கியுள்ள பீஷ்மருக்கு இப்பாக்கியம் கிட்டவில்லை.

ஓம் சிறி சாயி ராம்.


Monday, January 24, 2022

பகவான் அருச்சுனனுக்குக் கீதையை நான்கே நிமிடத்தில் உபதேசித்த விபரம்.

ஓம் சிறி சாயி ராம்.

குருச்சேத்திரம் எனக் குறிப்பிடப்படும் தர்மசேத்திரத்தில் கௌரவர் தரப்பில் யுத்தம் புரியத் தயாராக 11 அக்குறோணி எண்ணிக்கை கொண்ட சேனை அணிவகுத்து நின்றது. பாணடவர்களின் பக்கம் சண்டைபரியத் தயார் நிலையில் 7 அக்குரோணிச் சேனை தயார் நிலையில் இருந்தது. இரு தரப்பினரும் யுத்தத்தை ஆரம்பிக்க மிக முனைப்புடன் நின்றனர்.

மொத்தத்தில் சொல்வதானால் இருதரப்பிலும் 18 அக்குரோணிச் சேனைகள் இறுதி யுத்தத்துக்கான 
 பரபரப்புடன் நின்றிருந்தனர்.

கௌரவ சேனைகளுக்கு பீஷ்மர் தலைமை தாங்குவதைத் தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
துரியோதனனும் தம்பிமாரும் இப் போரில் வெற்றி பெற்று அஸ்தினாபுரம் மற்றும் இந்திரப் பிரஸ்தம் என்பவற்றைத் தொடர்ந்தும் தாங்களே ஆட்சி புரிய வேண்டும் என்ற வெறியுடன் போர்முனையில் இருந்தனர்.

பாண்டவர் தரப்பினர் முறைப்படி தமக்குச் சேர வேண்டிய அரசாட்சியை மீண்டும் பெறவும் தமது சபதங்களை நிறைவேற்றவும் துடிப்புடன் நின்றனர்.

கண்ணபிரான் தர்மத்தின் பக்கம் இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில்தான் அருச்சுனன் தன் நிலைகுலைந்து காண்டீபத்தை நழுவவிட்டுத் தேர்த்தட்டில் உடகார்நாதிருநதான்.
இந்தப் போர் தேவையற்றது எனவும் இரத்த உறவினர்கள்  பாட்டன் மற்றும் குரு போன்றோரைக் கொல்வதன் மூலம் நாட்டைத் திரும்பப் பெற்று அரசாள்வதைவிட‌க் காட்டிலும் குகைகளலும் கனிகளையும் கிழங்குகளையும் உணண்டு சன்னியாசியாக வாழ்வதே மேலானது என்றும் கிருஷ்ண பகவானிடம் கூறினான்.

இந்த நிலையில்தான்‌  கீதோபதேசத்தை கிருஷ்ண பகவான் ஆரம்பித்தார்.

பகவத் கீதையில் சுமார் 700‌க்கு மேற்பட்ட சுலோகங்கள் உள்ளன. இவை அனைத்தையும் அருச்சுனனுக்கு உபதேசித்து முடிக்கக் குறைந்தது 5 முதல் ‌6 மணிநேரம் தேவைப்படும்.

யுத்த. சன்னத்தராக நின்ற இருபுறத்துச் சேனைகளும் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்திருக்க முடியாது
.
கலியுக அவதாரமான நமது சாயிநாதன்தான் துவாபர யுகத்தில் கண்ணபிரானாகத் திரு அவதாரம் செய்து கீதோபதேசம் செய்தவர்.
தான் கீதோபதேசத்தை சுமார் 4 நிமிடங்களே நிகழ்த்தியதாகவும், அருச்சுனனைத் தனது கடமையைச் செய்யுமாறே கூறியதாகவும் 700 ‌சுலோகங்களையும் மகாவிஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் வியாசபகவானே விரிவாக எழுதியதாகவூம்‌ சாயிக்கண்ணனே திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

ஓம் சிறி சாயி ராம்.
 

Sunday, January 23, 2022

பகவான் சொன்ன நமது கடமை.

ஓம் சிறி சாயி ராம்

நமது சாயி நாதனின் அருள் மொழிக்கிணங்க "எனது கடமை" என்பதே பகவத் கீதையின் சாரமாகும்.

பெங்களூரில் வைற் ஃபீல்ட் என்னுமிடத்தில் நமது பகவானின் பிருந்தாவனம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
அங்கு பிருந்தாவனம் உயர்கல்விப்பீடத்தில் கல்விபயின்று பகவானருளமுதத்தைப் பருகும் மாணவர்கள் சாயிபகவானுடன் உரையாடி மகிழும் வாய்ப்பு நிகழும்.

வைற் ஃபீல்டில் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்தபின்‌ அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் தனது தனிப்பட்ட வசிப்பிடமான திரயீ என்னுமிடத்தில் பகவான் கலந்துரையாடுவது வழக்கம்.

மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர் களுடன் நடைபெறும் இவ்வுரையாடலின்போது மாணவர்களின் தனிப்பட்ட விடயங்கள் முதல் மிக அரிதான ஆன்மீக விடயங்கள் வரை விரிவாக எம்பெருமான் உரையாடுவார்.

அப்போது, பகவத்கீதையின் இறுதிச் சொல் ‌'மம' என்றும், முதலாவது சொல் 'தர்ம' என்றும் விளக்கிய பகவான், இவ்விரு சொற்களையும் சேர்த்தால் வரும் சோற்றொடர் சுலோகத்தில் 'மம தர்ம'  என்றும்,  அதன் தமிழ் அர்த்தம்் 'எனது கடமை' என்றும், கீதோபதேசத்தின் முழுப் பொருளும் இச்சொற்தொடரில் அடங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதாவது மனிதப்பிறவியெடுத்த அனைவரது கடமையும் பகவத் கீதையின் இச்சொற் தொடரில் அடங்கிய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஓம் சிறி சாயி ராம்.

கீதையின் கருப்பொருள

ஓம் சிறி சாயிராம்.

இறைவன் மனிதனைப் படைக்கும்போது மனிதனில் 85 விகிதம் இறைவனின் தன்மையும் 15 விகிதம் சுய புத்தியைப் பயன்படுத்தி முழுமையாக இறைவனை அடையும் வழியையே காட்டினார். 

ஆனால் மனிதன் தன் புலன்களைக் கட்டுப்படுத்தி முழுமையான இறை நோக்கத்தைத் தவறவிட்டதன் காரணத்தால் இறைத்தன்மை குறைந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சம்சார சாகரத்தில் சிக்கித் தவிக்கிறான்.

மனிதப்பிறவியின் உண்மை நோக்கமான இறைவனையடையும் வகையறியாது தவிக்கிறான்.

எனவே தொடர்ந்து இறை சிந்தனையில் மனதைச் செலுத்தி நமக்கு அளிக்கப்பட்ட இம்மனிதப்பிறவியின் பயனையடைவதே நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும்.

ஓம் சறி சாயி ராம்.

Saturday, January 22, 2022

பகவான் நமக்களித்த கடமை

ஓம் சிறி சாயி ராம்.

பகவான் தனது அருளுரைகளின் போதும் அவர் அருளிய கீதை வாகினியிலும் மனிதர்களாகிய நமது கடமை என்னவென்றும், நமக்கு எம்பெருமான் எதற்காக மனிதப்பிறவியை வழங்கியுள்ளார் என்பதையும், பகவத்கீதையின் சாரத்தைக் கல்விமான்கள் மட்டுமன்றிப் பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கமளித்துளளார்.

துவாபரயுகத்தில் கண்ணபிரானாக அவதரித்து அருச்சுனனுக்கு ‌கீதோபதேசம் அருளியவரல்லவா நமது கலியுகக் கண்ணன் சாயிநாதன்.

 பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் மரணமடைந்தே ஆகவேண்டும். எனவே பூமியில் பிறந்த மனிதனும் என்றோ ஒருநாள் இறந்தே ஆகவேண்டும்.

மனிதனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமை என்னவென்றால் மனிதனுக்கு மாத்திரமே, தான் யாரென உணரும் சக்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துமே இறைவனால்தான் படைக்கப்பட்டவை.
அதேவேளை நமது கலியுகக் கண்ணனான சாயிநாதன், தான் படைத்த அனைத்திலும் சிறந்த படைப்பு மனிதன்தான் என்று கூறுகிறார்.
எனவே இறைவனிடமிருந்து தோன்றிய மனிதன் மீண்டும் இறைவனுடனேயே‌ சென்று சேரவேண்டுமென்று பகவான் கூறுகிறார். அதுமட்டுமன்றி மனிதன் பிறப்பது மீண்டுமொரு பிறப்பைத் தவிர்ப்பதற்கேயென்றும், மரணமென்பது மீண்டுமொருமுறை பிறந்து இறப்பதைத் தவிர்ப்பதற்கேயென்றும் நமது சாயிநாதன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஓம் சிறி சாயி ராம்.
(இதன் தொடர்ச்சி நாளை)
 

Friday, January 21, 2022

அருச்சுனனின் தடுமாற்றம்

ஓம் சிறி சாயி ராம். 

 அருச்சுனனின் உள்ளம் தடுமாறுவதை கண்ணபிரான் நன்கு அறிந்திருந்தார். தடுமாற்றத்தை உருவாக்கியவரே பரந்தாமன் அல்லவா. 

எம்பெருமான் அருச்சுனனின் ரதத்தை துரோணர் மற்றும் பீஷ்மரின் ரதங்களின் முன் நிறுத்தினார். அவர் வேண்டுமென்றே துரியோதனனின் ரதத்தின் முன் செல்லவில்ல்லை. துரோணாச்சாரியர் மற்றும்் ‌பீஷ்மர் எதிரணியில் நிற்பதையும தனது மரியாதைக்குரிய பாட்டனார் மற்றும் குருதேவரையும் உறவினரையும் கொல்லவேண்டியேற்பட்டதை எண்ணி அருச்சுனன தடுமாறினான். இந்த யுத்தத்தின் மூலம் உறவினர்களை அழித்து வெற்றி பெற்று நாட்டை ஆள வேண்டியுள்ளதை எண்ணித் தடுமாறினான் அருச்சுனன. அவனது வில்லான காண்டீபம் அவனது கையிலிருந்து நழுவியது. கால்கள் நிற்கும் சக்தியை இழந்து தேர்த்தட்டில் உட்கார்ந்து விட்டான். 

 அங்குதான் தனது கடமை எது என்பதை அருச்சுனன் மறந்துவிட்டான். 

ஓம் சிறி சாயி ராம்.

Wednesday, January 19, 2022

கீதை பிறந்த கதை

ஓம் சிறி சாயி ராம். 

தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச்‌ சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்குறோணிக் கௌரவ‌‌சேனை ஒருபுறமும் யுத்தத்துக்குத் தயாராக அணிவகுத்து‌நின்றனர். 


 அருச்சுனின் தேர்ச்சாரதியாக கிருஷ்ணபரமாத்மா ஆயுதமேந்தாமல் அமர்ந்திருந்தார். 

போருககுத் தயாராக இருந்த அருச்சுனனுக்கு எதிர் அணியில் தம்முடன் போர்புரியத் தயாராக‌ வந்திருப்போரைப் பார்க்கும்‌‌ ஆசை ஏற்பட்டது. எனவே தனது தேரோட்டியான கிருஷ்ண ‌பகவானிடம்‌ தனது தேரை இரு படைகளுக்கும் நடுவில் கொண்டு சென்று நிறுத்துமாறு கேட்டான். அதன்படியே இரு சேனைகளின் நடுவில் அருச்சுனனின் தேரை நிறுத்தினார் கண்ணபிரான். 

எதிரிகளின படையை அவதானித்த அருச்சுனன் தன்னைச் சிறு வயதிலிருந்து தூக்கிச் சீராட்டி வளர்த்த பீஷ்மர மற்றும் தனது குரு துரோணர் மற்றும் உறவினர்கள் தன்னுடன் போர்புரிய எதிரணியில் தயாராக நிற்பதைக் கண்டான். இதனால் அவனது மனதில் ஒருவித கலக்கம் ஏற்பட்டது.

 (தொடர்ச்சி நாளை) 

ஓம் சிறி சாயி ராம்.

Tuesday, January 18, 2022

சாயிக்கண்ணன் நம் அனைவருக்கும் கூறிய‌ வார்த்தைகள்

ஓம் சிறி சாயிராம் 

 இந்த ஆக்கத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு‌ வார்த்தையும் துவாபர யுகத்தில் அவதரித்த கண்ணபெருமான் மகாபாரதப்போரின் ஆரம்பக் கட்டத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த கீதோபதேசத்தைக் கலியுக அவதாரமான அதே சாயிக்கண்ணன் நாம் அனைவரும் நன்கு புரியும் விதமாகக் கூறிய‌வார்த்தைகளாகும். 

 எனவே இங்கு கூறப்படும் விடயங்களைப் பக்தி சிரத்தையுடன் படித்து நன்கு விளங்கிக்கொண்டு நமது ஆன்மீக முன்னேற்றத்துக்குப் பயன் படுத்துவோம். கீதையின் உண்மையான சாரத்தைப் புரிந்துகொள்வோம். 

 ஓம் சிறி சாயிராம்.

Monday, January 17, 2022

பகவான் அருளிய பகவத்கீதையின் சாரம்

ஓம் சிறி சாயிராம். 

 எம்பெருமான் பகவான் சிறி சத்திய சாயி பாபாவின் கமல மலர்ப் பாதங்களில் இவ் ஆக்கத்தைச்  சமர்ப்பிப்பதுடன்   அன்பின் வடிவங்களான‌ உங்கள் அனைவருககும் எம்பெருமான் பகவான் சத்திய சாயி ராமனின் உபகரணமான அடியேனின் பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 துவாபர யுகத்தில் எம்பெருமான் கண்ணபிரானாக அவதரித்தபோது அருச்சுனனுக்கு வழங்கிய பகவத் கீதையை கலியுகத்தில் வாழும் நாம் அனைவரும் மிகத்‌தெளிவாகப் புரிந்து கொகொள்ளும் வகையில் கலியுக அவதாரமான எமது சாயிக்கண்ணன் அருளிய பகவத் கீதையியின் சாரத்தை எம்பெருமானின் உபகரணமான நான் உங்கள்முன் சமர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

ஓம் சிறி சாயிராம்

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...