Thursday, December 31, 2020

நமக்குள் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணமே நமது அமைதிக்கான வழியாகும்

அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்படுகிறோம், சங்கடப்படுகிறோம், அவமானப்படுகிறோம். நமது கோழைத்தனமும் தன்னைத் தானே பழித்துக்குள்ளுதலும் தெய்வீகத் தன்மையல்ல. நமது அடிப்படை இயல்பு தெய்வீகமாகும். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள புத்தியையும், வலிமையையும் வைத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாமெல்லாம் பள்ளிக்கூடத்திலும் கல்லூரிகளிலும் படிக்கிறோம். ஒரு கால கட்டத்தில் அந்தப் படிப்புமுடிந்து, பட்டம்பெற்று வெளியுலகிற்குச் செல்கிறோம். பட்டம் பெற்றபின் கல்விச்சாலைகளும் கல்லூரிகளும் நமக்குத் தேவை இல்லை. இதைப்போலவே உலகம், வாழ்க்கை பற்றிய உண்மையை நாம் உணர்ந்தவுடன் வீடுபேறு கிடைத்துவிடுகிறது. அதற்குப் பிறகு இந்த வாழ்க்கை நமக்குத் தேவையில்லாமல் போகிறது. நாம் பட்டத்தைப் பெற்றே ஆகவேண்டும். நாம் தேர்ச்சி பெறுவதற்குரிய முயற்சியை முறையாக எடுத்துகொள்ளவேண்டும். நம்முடைய முயற்சியில் கவனம் செலுத்தாமல், இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தால் நமக்குப் பலன் ஏதும் கிடைக்காது. நாம் நம்மைச் சீர்படுத்திக்கொண்டால் மட்டுமே நமக்கு வீடுபேறு கிடைக்கும். ஒரு வங்கியில் ஒருவர் கணக்கு வைத்துக்கொண்டிருந்தால் அக்கணக்கிலிருந்து அவர் மாத்திரமே பணம் எடுக்க முடியும். மற்றவர்கள் அந்தப் பணத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. அவர்களது கணக்கு நமக்குப் பயன்தராது. இன்றும் கூட இமாலயத்தில் சிறந்த துறவிகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்கிறார்கள். அவர்களது பிரேமை இந்த மனித சமுதாயம் அனைத்தையும் அரவணைக்கிறது. நீங்கள் சரியான பாதையிலே பயணம் செய்து உங்களுடைய முயற்சியின் மூலம்தான் வீடுபேறு அடைய வேண்டும். துறவிகள் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கலாமே தவிர, முயற்சி உங்களுடையதாகவே இருக்க வேண்டும். நெடுந்தூரத்திலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குத் திரும்பச் செல்ல வேண்டும். அதுதான் சரியாதனதாகும். அதைப்போலத்தான் பிறப்பு வாயிலாக நாம் நமது பயணத்தை எங்கு தொடங்கினோமோ அதே இடத்திற்கு மீண்டும் நாம் செல்லத்தான் வேண்டும். அது தவிர்க்க இயலாத ஒன்றாகும். அந்த இடமே இறைவனாகும். ஒரேஒரு சூரியன்தான் உள்ளபோதிலும் அவர் கோடிக்கணக்கான குளங்கள், கிணறுகள், பானைகள் போன்றவற்றுள் பிரதிபலிக்கிறார். அதைப்போலத்தான் நல்ல மனதுடைய தனி மனித ஜீவிகள் இறைவனுடைய பிரதிபலிப்பாக இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளேயும் ஆத்மா இருக்கிறது. இங்கு லட்சக்கணக்கான் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரின் இதயத்துக்குள்ளும் சுவாமி பிரகாசித்துக்கொண்டிருக்கிறார். இதுவே உண்மையான ஆத்மாநந்தமாகும். அதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படி நமக்குள் இறைவன் இருக்கிறார் என்ற எண்ணத்தைக் கொண்டுவந்துவிட்டால் அதுவே நமது அமைதிக்கான வழியாகும்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...