ஓம் ஸ்ரீ சயி ராம்
ஒரு நாள் இரவு நமது பகவான் பாபா பிரசாந்தி நிலையத்திலுள்ள தனது படுக்கையறையில் படுத்திருந்தார். அந்த அறையில் பகவானுடன மிக அணுக்கமானவர்களும் பகவானின் சேவைநிறுவனங்களில் உயர்பதவி வகிப்பதுடன் பல்லாண்டுகளாகப் பகவானின அவதார மகிமைகளை அனுபவித்து உணர்ந்தவர்களுமான இரண்டு பக்தர்கள் உடனிருந்தனர்.
அதற்கு முந்தைய தினம்தான் பகவான் வைற்பீல்டிலிருந்து பிரசாநதி நிலையத்துக்குத் திரும்பவந்திருந்தார்.
பகவான் திடீரென அருகிலிருந்த பக்தரிடம் "பெங்களூர் மிகக் குளிராக இருக்கிறது. என்னால் குளிரைத்தாங்க முடியவில்லை. உடனடியாகப் புட்டபர்த்திக்குப் போவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள்" என்று நடுங்கியபடியே கூறியுள்ளார்.
அதற்கு அந்தப்பக்தர் "சுவாமி, நீங்கள் நேற்றே வைற்பீல்டிலிருந்து புட்டபர்த்திக்குவந்துவிட்டீர்கள். தற்போது தாங்கள் இருப்பது பிரசாந்தி நிலையத்திலிருக்கும் உங்கள் தனியறையில்தான்" என்று பதிலிறுத்தார்.
உடனே பகவான் குளிரில் நடுங்கும் பாவனையுடன் உடனிருந்த அடுத்த பக்தரிடம், முன்பு மற்றப் பக்தரிடம் கூறியபடியே, தனக்குக் குளிர் தாங்கமுடியாமலிருப்பதாக முறையிட்டு, உடனடியாக வைற்பீல்டிலிருந்து புட்டபர்த்திக்குச் செல்வதற்குத் தனது வண்டி ஒட்டுனரிடம் கூறி உரிய ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
இரண்டாவது பக்தரும் சுவாமி புட்டபர்த்தியிலிருப்பதையும் முந்தையதினமே வைற்பீல்டிலிருந்து வந்துவிட்டதையும் சவாமியிடம் எடுத்துரைத்ததுடன் சுவாமி தனது பிரத்தியேக அறையிலேயே இருப்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
இவற்றை ஏற்றுக்கொள்ளாத பகவான், தனது அறைக்கு வெளியேயிருந்த மாணவர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அம்மாணவனை அழைத்துத் தான் வைற்பீல்டிலிருப்பதாகவும் தாங்கமுடியாத குளிரால் அவதிப்படுவதாகவும், தனது ஓட்டுனரிடம் தான் புட்டபர்த்திக்குச் செல்வதற்கு வேண்டிய ஏற்பாட்டை உடனடியாகச் செய்யும்படியும் கூறினார்.
உடனே அந்த மாணவர் "நீங்கள் கூறியபடியே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன் சுவாமி" என்று கரங்களைக்கூப்பியபடி சொல்லிவிட்டு உடனடியாக வெளியே சென்றுவிட்டான்.
அந்த மாணவன் வெளியே சென்ற மறுகணமே தனது போர்வையை அகற்றிவிட்டுக் கலகலவெனச் சிரித்த பகவான், தனது முக்கிய தொண்டர்கள் போன்று உடனிருந்த இரண்டு பக்தர்களிடமும் "முட்டாள்களே, பகவானாகிய நான்பிரசாந்தி நிலயத்திலுள்ள எனது தனியறையிலிருப்பது கூட எனக்குத் தெரியவில்லை என்று நினைத்து, எனக்கே நான் எங்கேயிருக்கிறேன் என விளக்குகிறீர்களே, நான் மனித உருவில் வந்த அவதாரம் என்பதை மறந்துவிட்டீர்களே. அந்த மாணவனைப் பார்த்தீர்களா? பகவானின் வார்த்தையே சகலமும் என்னும் சரணாகதி மனநிலையுடன் எப்படிச் செயல்படுகிறான்! என்று கூறி நகைத்தார்.
எனவே மனித உருவில் அவதரித்த சாயிநாதன் தான் ஒரு சாதாரண மனிதன்போல் நடந்தபடி நம்மைத் தனது மாயையினுள் ஆட்படுத்தி, மறு கணமே தான் யார் என்பதைப் பல தடவை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே நமது சாயிநாதனின் தெய்வீகத்தை மனதில் பதித்த படி எம்பெருமானின் அருளில் திளைத்து இன்புறுவோம்.
சமஸ்தலோகா சுகினோ பவந்து.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
.