Saturday, April 2, 2022

பக்தர்களுக்கு அவரவர் விரும்பும் பெயருள்ள தோற்றத்தில் அருள்பாலிக்கும் இறைவன்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்

இறைவன் ஒருவரே. இறைவன் எல்லாம் வல்லவர். எல்லாம் அறிந்தவர்.

இறைவன் தேசம், மொழி, மதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். குறிப்பிட்ட பெயரோ உருவமோ அற்றவர்.எந்த உருவத்திலோ அல்லது எந்தப் பெயரைக்கொண்டோ வணங்கினாலும் அந்தப் பெயரை‌ஏற்றுக் கொண்டு யார் எந்த உருவத்தில் வணங்கினாலும் அதே உருவத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

நரசிம்மாவதாரத்தைத் தனது இஷ்ட தெய்வமாக வணங்கும் ஒருவர் தனது புனித யாத்திரையின்போது ஒரு அம்மன் கோயிலுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.  அவருக்கு அங்கு தேவியின் சிலை உள்ள இடத்தில் நரசிம்மரைத் தரிசிக்கவேண்டுமெனனும் ஆர்வம் ஏற்பட்டது. அவரது ஆவலைப் பூர்த்திசெய்வதற்காக அங்கிருந்த தேவி தனது திருவுருவத்தை நரசிம்மமூர்த்தியின் திருவுருவமாக மாற்றி அந்தப்பக்தருக்குக் காட்சியளித்துள்ளார். இதனை அந்தப் பக்தர் மாத்திரமன்றி அங்கிருந்த அனைவரும் கண்டு தேவியின் அருளாசியைப் பெற்றுள்ளனர். மேலும் தேவியும் நரசிம்மமூர்த்தியும் வெவ்வேறு தெய்வங்களல்ல என்பதை லோகமாதா அங்கிருந்ந அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.  

எனவே அனைவரும் நமக்குப் பிடித்த உருவத்தையும் பெயரையும் பயன்படுத்தி வணங்கும்போது நமக்கு அதே பெயருள்ள உருவத்தில் காட்சியளித்து நமக்கு இறைவன் அருள்பரிகிறார்.

இப்போதுகூடப் பல கிராமங்களில் மூன்று செங்கற்களைவைத்து நடுவிலிருக்கும் கல்லை இராமபிரானாகவும் இடது பக்கத்திலுள்ள கல்லை சீதாதேவியாராகவும் வலது பக்கத்திலிருக்கும் கல்லை இலட்சுமணராகவும் கருதி வணங்கி அருள் பெறுகிறார்கள்.

அவர்கள் கல்லிலே தெய்வத்தைக் காண்கிறார்கள்.

நமது சாயிபகவான் தன்னிடம் வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவரவரது இஷ்டதெய்வத்தின் வடிவில் காட்சியளித்து அருள்புரிவது நாம் அனைவரும் அறிந்த விடையமாகும்.

பல்புகள் வேறு வேறானாலும் அவற்றினுள் பாயும் மின்சாரம் ஒன்றேயென்றும், அதைப் போலவே எந்தத் தேசத்தைச் சேர்ந்தவராயினும் சரி, உடல்கள், உணர்வுகள் இவையெல்லாம் வேறு வேறாக இருந்தாலும் ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்திலும் ஒன்றுதான் என்றும் ஆகவே ஜாதி. மதம். மொழி, தேசியம் ஆகியவற்றின் பெயரால் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளைத் துறந்து. எல்லோரும் ஒரே தெய்வத்தின் வடிவங்களே என்னும் ஒற்றுமையின் செய்தியை எல்லோரிடத்தும் பரவச் செய்யவேண்டுமென்றும் சாயிநாதன் தனது அருளுரைகளில் கூறி வருகிறார்.. 

மேலும், நாடுகள் பல ஆயினும் அவை இருக்கும் பூமி ஒன்றுதான்‌என்பதும், நகைகள் பலவடிவங்களிலும் பல பெயர்களிலும் இருந்தாலும் அவை தங்கம் எனப்படும்  ஒரே உலோகத்தினால்தான்‌ உருவாக்கப்பட்டுள்ளன என்பதும், 
பசுக்கள் பல நிறங்களிலும் பல இனங்களிலும் இருக்கும்போதிலும் அவற்றிலிருந்து ‌நாம் பெறும் பால் ஒரே தன்மையை உடையது என்றும், உடல்கள் பலவாக இருக்கும்போதிலும் அவை சுவாசிக்கும் காற்று ஒன்றே என்றும், இவ்வாறு அனைத்துப் பொருட்களிலும்  உயிரினங்களிலும் உள்ள ஒற்றுமையைப் புரிந்துகொண்டு நாம் அனைவரும் சேவை புரியும் போது தான் நாம் பரமானந்தத்தை அனுபவிக்கமுடியும் என்றும் நமது பகவான் எடுத்துரைத்து வருகிறார். 

"நீங்கள் அனைவரும்‌அன்பிலேயே பிறந்தீர்கள், அன்பிலேயே வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அன்பிலேயே ஐக்கியமாகிறீர்கள். பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மைக்கு முழுமையான வடிவங்களாகத் திகழ்கின்றன. சூரியன், உலகில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் தந்து அனைவருக்கும் வாழ்வளிக்கிறது. மரங்கள் கரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. தாய் போன்ற மண்ணோ, பொறுமைக்கும், தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாய் பாடம் போதிக்கிறது. எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் இவை மனித குலத்திற்குத் தொண்டாற்றுகின்றன. இயற்கையை விடச் சுயநலமற்ற அன்பிற்குச் சிறந்த உதாரணம் வேறெதுவும் இல்லை. இயற்கையில் பிறந்து, இயற்கையினாலேயே போற்றிப் பாதுகாக்கப்படும் மனிதர்கள் பலர், இயற்கை வெளிப்படுத்தும், இத்தகைய நற்குணங்களைத் தன்னககத்தே கொள்ளாமல், சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது மிகவும் அவமானகரமானது. 

இளைய தலைமுறையினர் சுயநலத்தையும், சுயலாபத்தையும்  வேரோடு களையவேண்டும். உலக மாந்தர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பவேண்டும்" 
என்று எம்பெருமான் கூறியுள்ள அருளுரையைக் கடைப்பிடித்து வாழ்ந்து நமக்கு இறைவன் அருளியுள்ள இம்மனிதப்பிறவியின் பயனை அடைவோம்.

ஸமஸ்த லோகா ஸூகினோ பவந்து  

உலகம் அனைத்தும்‌ நலமாகவாழ வாழ்த்துவோம்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...