ஓம் ஸ்ரீ சாயி ராம்.
பகவான் கூறுகிறார்:
"நீங்கள் எதற்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கிறேன். என்னைப் பின்பற்றி நடவுங்கள். இறைவன் உங்களுக்கு எபொழுதும் உதவி புரியவே உங்களைச் சுற்றியும், உங்கள் மேலும், கீழும், உஙகளின் உள்ளேயும், வெளியேயும் உறைந்துளாளார்.
கடவுள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் பக்கபலமாக இருந்து நிலையான ஆனந்தத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்.
ஆகையால் எக்காரணத்தைக் கொண்டும் எவரும் மனத்தளர்ச்சி அடையலாகாது. உண்மையைச் சொல்லப்போனால் மனிதன் மனிதனல்ல, மனிதன் தெய்வமே.
இதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உடல்மீது பற்றுக் கொள்ளாமல் உடலைக் கடவுள் தந்த கருவியாக மாத்திரமே உபயோகித்துக் கடமையாற்றுங்கள். கடமையாற்றுவதற்கே உடல் வழங்கப்பட்டுள்ளது.
செய்யும் செயல்கள் அனைத்தையுமே சுயநலம் சிறிதுமின்றி, செய்யும் செயல்களின் பலனைஎதிர்பாராமல் இறைவனுக்கு அர்ப்பணமாகவும் சமுதாயத்தின் நலன்கருதிய சேவையாகவும் செய்யுங்கள். சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுங்கள். திக்கற்றவர்கள் மற்றும் துயரப்படுபவர்களின் துயரைத் துடைக்கச் சேவை செய்யுங்கள்.
எவரிடமும் எக்காரணம் கொண்டும் வெறுப்புக் கொள்ளாதீர்கள். கடவுளை நேசியுங்கள். உங்களுக்குப் பிடிக்காதவரொருவரைச் சந்திக்க நேரும்போது அவரிடம் வெறுப்பாகப் பேசாதீர்கள். அவரை உங்கள்மேவ் மேலும் வெறுப்படையச் செய்யாதீரகள் அவரிடம், நண்பரே, எப்படி இருக்கிறீர்கள் என்று அன்போடு விசாரித்தால் அவரிடமிருக்கும் வெறுப்பு அகலும். நல்லெண்ணம் ஏற்படும். நல்லுறவும் ஏற்படும்.
அனைவருக்கும் தியாகம் மிக அவசியம். தியாகம் அல்லது நற்குணங்கள் அல்லாதவற்றைத் துறத்தலே யோகமாகும்.
மாறாகப் போகம் இச்சைக்கு வழிவகுக்கும்.
தியாகம் யோகத்தை அளிக்கும். போகம் ரோகத்துக்கு வழிவகுக்கும். எனவே ஒவ்வொரு மனிதரும் எப்பொழுதும் கடவுள் சிந்தனையுடன் செயல்புரியவேண்டும்.'
பகவானின் இவ்வார்த்தைகளை நாம் முழுமனதுடன் பின்பற்ற வேண்டும்.
மனித உருவில் அவதரித்து நம்மிடையே நடமாடும் பெருமானை அறிந்துகொள்ள வேண்டும்.
அவரின் அருள்மொழிகளைச் சிரமேற்கொண்டு அவர் காட்டும் சனாதன தர்மத்தின் வழியில் நடந்து பிரசாந்தி பெறவேண்டும்.
ஓம் ஸ்ரீ சாயி ராம்.
No comments:
Post a Comment