Saturday, January 23, 2021
ஆசிரியர்களும், பெரியவர்களும் தாய் தந்தையரும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக வாழவேண்டும்
அன்பின் திரு உருவங்களே,
தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. பிள்ளைகளுக்கு எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை என்றால் இருவரும் வேலைக்குச் செல்லலாம். பலர் வீட்டுக்கு வந்தபின்கூடச் செய்தித்தாள், டீவீ போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிலர் கிளப்புகளுக்கும் போகிறார்கள். இப்படியான நிலமையில் பிள்ளைகளிடம் எப்படி முன்னேற்றத்தை எதிர்பார்க்கமுடியும். வீட்டில் கவனம் செலுத்திப் பிள்ளைகளைப் பராமரித்து வருவதே சிறந்தது. அதுவே நமது உண்மையான வருமானம். பிள்ளைகள் கெட்டுப்போய் மனம் வருந்த வேண்டி ஏற்படுவதைத் தடுத்து, அவர்களை நன்கு பராமரித்தல் பெற்றோர்களின் தலையாய கடமையாகும். சமுதாயத்தில் நடைபெறும் செயல்களின் விளைவுகள் பிள்ளைகளையே பாதிக்கின்றன. எனவே நமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் நாம் வாழ வேண்டும். அதனால் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது நல்லவர்களாக இருப்பார்கள். காலையில் 8 மணி வரை தூங்குவதற்கு அவர்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நீங்களும் அதிகாலையில் எழுந்து அவர்களும் எழுந்திருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டும். நாம் முதலில் இலட்சிய மனிதர்களாக இருக்கவேண்டும். எந்தப் பொறுப்புகளும் இல்லாதவர்கள், குழந்தைகள் இல்லாதவர்கள், அதிக நேரம் தூங்கினால் பரவாயில்லை. அதிக நேரத் தூக்கம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குப் பரவாயில்லை. நாம் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிசெய்யவேண்டும். கட்டுப்பாடு, பக்தி, கடமை, ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. மனித வளப் பண்புகளை அதிகமாகக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவர்களின் அவசியத் தேவைகளை மாத்திரமே நாம் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான அளவுக்கு மாத்திரமே வாங்கிக் கொடுக்கலாம். அப்பொழுதுதான் அவர்கள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்கள். பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பது பெற்றோரின் கடமையாகும். சாயிக் கல்வித்திட்டங்கள் பற்றிப் பெற்றோர்களும் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில பெற்றொர்களுக்குச் சாயிக்கல்வித் திட்டங்கள் பற்றித் தெரியாது. மாணவர்களும் பெற்றோர்களுக்கு விளக்கமாகச் சொன்னால்தான் பெற்றோர்களுக்கும் புரியும். மாணவர்களுக்கு வீட்டில் நடக்கும் சில நிகழ்ச்சிகளுக்கும் பள்ளியில் போதிக்கும் நற்பண்புகளுக்குமிடையில் வேறுபாடு இருப்பதால் குழப்பம் ஏற்படுகிறது. சில பெற்றொர்கள் பிள்ளைகளுக்கு எதிரில் பொய் பேசுகின்றனர். மாணவர்களிடம் நாம் மிகவும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டும். அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அறிய அவர்களின் பள்ளிகளுக்குச் சென்று பார்க்க வேண்டும். தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டு அதிக மதிப்பெண் பெற்றதாகக் கூறும் பிள்ளைகளும் உள்ளனர். பெற்றோரும் பள்ளிக்குச் சென்று பிள்ளைகளின் மதிப்பெண்களைச் சரிபார்க்க வேண்டும். உண்மையில் கிராமங்களில்தான் பிள்ளைகள் பெற்றோர்களைப் பாதுகாக்கிறார்கள். நகரங்களில் அதிகமான பிள்ளைகள் தெருக்களில் சுற்றுகிறார்கள். இது நல்லதல்ல. படிக்கும் பருவத்தில் பிள்ளைகள் வீணாக அலையக் கூடாது. வீட்டில் இருப்பதால் குடும்ப கௌரவமும் மதிப்பும் காப்பாற்றப்படுகிறது. பிள்ளைகள் அதிகமாகப் பணத்தைச் செலவு செய்யாமல் பெற்றோர் கண்கானிக்க வேண்டும். அவர்களிடம் எது சரி எது தவறு என்று தெளிவாகச் சொல்லவேண்டும். அநாவசியச் செலவு நல்லதில்லை என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். எவ்வளவு கிடைக்கிறதோ அதற்குள்ளாகத்தான் செலவு செய்ய வேண்டும். இவ்வாறாக அவர்கள் நேர்வழியில் செல்லப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், பெரியவர்களும் தாய் தந்தையரும் முன்னுதாரணமாக வாழவேண்டும். பிள்ளைகள் சொல்வதைப் பல பெற்றோர்கள் கேட்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் சொல்வதைப் பல பிள்ளைகள் கேட்பதில்லை. யார் சொல்வது சரி, யார்சொல்வது தவறு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எல்லோரும் கலந்து ஆலோசித்து நல்வழியில் செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் நன்மையுடன் வாழ்ப் பிரார்த்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே
ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...
-
அன்பின் திருவுருவங்களே, நமக்குள்ளே இருக்கும் தெய்வீக இயல்பை நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இதன் காரணமாகத் தேவையற்ற துன்பங்களுக்கு உட்ப...
-
ஓம் ஸ்ரீ சாயி ராம். நமது வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள்அனத்துக்கும் நாம் தான் காரணம். நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதோ கெட்டதோ அனைத்துக்க...
-
ஓம் சிறி சாயி ராம். தர்மசேத்திரம் எனப்படும் குருச்சேத்திரத்தில் பாண்டவர்களின் ஏழு அக்குரோணிச் சேனைகள் ஒருபுறமும் துரியோதனின் பதினொரு அக்க...
No comments:
Post a Comment