Sunday, December 27, 2020

1996 ஜூன் 21 அன்று எம்பெருமான் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நிகழ்த்திய அருளுரையின் இந்தப் பகுதியைப் படித்து மகிழுங்கள்

“அன்பின் திருவுருவங்களே, நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் பல உள்ளன. பல விடயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். சொல்வதை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை சொன்னதைச் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆகவேண்டும். தினமும் காலையில் சாப்பிடுகிறோம். எனவே மாலையில் எதற்குச் சாப்பிடவேண்டுமென எவரும் நினைப்பதில்லை. ஏனென்றால் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டு மீண்டும் பசியெடுக்கும். எனவே மீண்டும் உண்ணவேண்டி ஏற்படுகிறது. ஒருமுறை கழுவிய முகத்தைச் சொற்ப நேரத்தின்பின் மீண்டும் கழுவுகிறோம். அதுபோலத்தான் கேட்ட விடயத்தை மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது அவ்விடயம் மனதில் நன்கு பதியும். சொல்லும் விடையங்களை மனதில் பதித்து, நடைமுறைப்படுத்தும் பொழுது ஆனந்தம் கிடைக்கும், மீண்டும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். ஆகவே ஒன்றைப் புரிந்துகொள்ளும் வரை சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லவேண்டி இருக்கிறது. சிறு குழந்தைகள் ஆரம்பத்தில் ஏ பி சீ டீ யைக் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு மில்க் என்பதை எடுத்துக்கொள்வோம். மில்க் (MILK) என்பதை அந்தக் குழந்தை மீண்டும் மீண்டும் உச்சரித்தால்தான் அது அக்குழந்தையின் மனதில் பதிகிறது. அப்படி உச்சரித்த பின்னர் தான் அதன் பொருள் விளங்குகிறது. ஆகவே அர்த்தம் புரியும் வரை, உண்மை புலப்படும்வரை உங்களுக்குச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியாகவேண்டும். பல விடயங்களைத் திரும்பத்திரும்பச் சொன்னபோதிலும் புதியன போன்றே தோன்றும். காயத்திரி மந்திரத்தைப் பற்றிப் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஒருமுறை சொல்வதற்கும் இன்னொருமுறை சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுவே சுவாமியின் சிறப்பம்சம். வார்த்தைகள் கூட எப்பொழுதும் புதிதானவை. ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிதானவை. இறைவன் நித்திய நூதனன், என்றும் புதிதானவன். அதுதான் தெய்வீகம். இந்தத் தெய்வீகத்தில் நீங்கள் திளைக்கவேண்டுமென்றால், என்றும் நீங்கள் புதுப் பொலிவுடன் திகழவேண்டும். பழயதையும், கழிந்ததையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம். எப்பொழுதும் அனைவரும் ஆனந்தமாகவே இருக்கவேண்டும். தெய்வீகம் என்ற வார்த்தையின் அர்த்தமாக நாம் வாழவேண்டும். இறைவனுடன் ஒன்றியிருப்பதுதான் ஆனந்தம். HAPPINESS IS UNION WITH GOD. இறைவனுடன் ஒன்றிணையும்பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது. தெய்வீகச் சிந்தனை இல்லாதவனின் முகத்தைப் பாருங்கள். அவனது சிரிப்பு வெறும் நடிப்பாகவும், விளக்கெண்ணெய் குடித்தவினின் முகம் போலவும் தோன்றுகிறது. தெய்வீக அனுக்கிரகத்தைப் பெற்றவனின் முகத்தைப்பார்த்தால், கலகலப்பாகவும், ஆனந்தமாகவும் காணப்படுகிறது. அவன் முகத்தில் தெவீகக் களை தெரிகிறது. தெய்விக அம்சம், தெய்வீக அம்சத்தின் கதிர் அவன்மீது விழுந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தெய்வத்தின் அருளுக்குப் பாத்திரமாகவேண்டுமெனில் அந்தத் தெய்வத்திடம் ஆழ்ந்த நம்பிக்கையும் ஈடுபாடும் அவசியம் தேவை. நம்பிக்கை, அன்பு ஆகிய இரண்டும் இருந்தால்தான் நாம் தெய்வீகத்தை அடையலாம். இந்த நம்பிக்கையும் அன்பும் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்கமுடியும். எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கு வேண்டுமானாலும் போகலாம். காட்டிலோ, கிராமத்திலோ, நகரத்திலோ அல்லது கண்காணாத தேசத்திலோ, எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். உடலின் உள்ளே, வெளியே,கண்களிலே, வீட்டிலே, மேலும், கீழும், உங்களைச் சுற்றிலும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை இருந்தால், எங்கு வேண்டுமனாலும் இருக்கமுடியும், செல்லமுடியும். இப்படிபட்ட நல்ல உணர்வுகளை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்பின் வடிவங்களே, தீய பழக்கங்கள் மற்றும் தீய செயல்களை விட்டு, நல்லெண்ணங்களை வளர்த்துக்கொண்டு, நற்செயல்களுக்கு இட்டுச்செல்லும் நல்லுணர்வுகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்போம், ஆன்மீகத்தில் முன்னேறுவோம்.”

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...