Tuesday, February 1, 2022

கலங்கிய அருச்சுனனுக்கு‌க் கண்ணபிரான் அளித்த விளக்கம்

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

யுத்தபூமியில் எதிர்த்து நிற்கும் இருபுறத்துச் சேனைகளின் மத்தியில் மனம் சோர்ந்து நின்ற பார்த்தனிடம் பகவான் கூறிய அறிவுரைகள் அவனுக்குப் பரிந்தபோதிலும் அவனது சந்தேகங்களும் குழப்ப நிலையும் முழுமையாகத் தீரவில்லை. 

இதனையுணர்ந்திருந்த பகவான் "அருச்சுனா, நான் நீ ஆற்ற வேண்டிய கடமைகளான கருமங்களைத் தெளிவாகக் கூறினேன். நீ புரிந்த போர்களைப் பற்றியும் அப் போர்களில் எத்தனையோ போராளிகள் உன்னால் கொல்லப்பட்டதும் உனக்கு நன்கு தெரியும்.

அப்படியிருக்க, தற்போது ஏன் தயங்குகிறாய்? உன் முன்னே உன்னை எதிர்த்துப் போரிட த் தயாராக நிற்கும் அனைவரும் யாராலாவது கொல்லப்படப் போகிறார்களா? அவர்கள் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். செத்த பாம்பை அடித்துவிட்டு ‌நான் கொன்றேன் எனறா கூறப்போகிறாய்?

இம்மண்ணில் பிறந்தபோது நீ யார்? பிறக்கும்போது‌  நீ குழந்தை. பெரியவர்கள் பெயரிட்ட பின்னரே நீ அருச்சுனன் என அழைக்கப்பட்டாய்.
அப்போது உனக்குக் குழந்தைப்பருவம். அதன்பின் நீ சிறுவனானாய். அதன்பின் வாலிபனானாய். வாலிபப் பருவத்தில் துரோணரின்‌ குருதட்சணையாகத் திருஷ்டத்தூய்மனைத் தேர்க்காலில் கட்டிய‌ உனது வாலிப உடல் எங்கே.

குழந்தை உடல் அழிந்து சிறுவனின் உடலாகியது. சிறுவனாக இருந்த உடல் எங்கே? அதன் பின்னர் வந்த வாலிப உடல் எங்கே. தற்போதுள்ள உடலுக்குப் பதில் வயோதிப உடல் ஏற்பட்டு, அதுவும் அழிந்து அவ்வுடலில் இருந்த ஆன்மா இன்னுமொரு உடலை எடுத்து வாழ்க்கையைத் தொடர்கிறது.

குழந்தையின் உடல் மறைந்து விட்டதென்றோ‌ பின்னர் வாலிப உடல் மறைந்துவிட்டதென்றோ யாராவது அழுது புலம்புகிறார்களா? உடலில் ஆன்மா வாசம் செய்யும்‌பொழுது ‌செய்யும்‌ கருமங்கள் அனைத்தையும்
பரமாத்மாவுக்கு அர்ப்பணமாக்கி விட்டால்‌ செய்யும் கருமங்களின் பலன்கள் அனைத்தும் ‌பரந்தாமனையே சென்றடையும்.
இதனால் ‌ஜீவாத்மா கர்மபலன்களுக்கு உட்படாமல் பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு இறைவனுடன் இரண்டறக் கலந்து விடும்" எனறு விளக்கமளித்தார்.

ஓம் ஸ்ரீ சாயி ராம்..

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...