Thursday, January 21, 2021

அன்பின் திரு உருவங்களே, நன்நடத்தை என்பது ஒரு முக்கியமான பண்பாகும். ஒற்றுமை இல்லாத காரணத்தால் உயர்ந்த தியாகம் நம்மிடையே இல்லாமல் போய் விட்டது. நம்மிடம் எல்லா நல்ல பண்புகளும் வளங்களும் உள்ளன. எல்லாத் தர்மங்களும் உள்ளன. ஆனால் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவை பயனற்றுப் போய் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம். எனவே நாம் நம்மிடையே ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே மானுட இனத்தைச் சேர்ந்தவர்கள். மனித இனத்தினுள் மிருகத்தன்மைக்கு இடமில்லை. எனவே நாம் மனிதர்களே எனும் உண்மை நிலையை உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம். நாம் அடுத்வருடைய துன்பங்களை நம்முடைய துன்பமாகவே பாவிக்கவேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களையும் நமது கஷ்டங்களாகவே கருதவேண்டும். மற்றவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை நாமும் அனுபவிக்கும்போதுதான் இந்த உண்மையை உணர்ந்துகொள்வோம். ஒன்றுபட்ட உணர்வைப் பெற்று, நம்மிடையே சகோதரத்துவத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்ல விடயங்களைக் கடைப்பிடித்துத் தீயவற்றை ஒதுக்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்தில் எல்லாம் கலந்துதான் இருக்கிறது. இதனால் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும். சமுதாயத்திலுள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தீயவற்றை ஒதுக்கித் தள்ளவேண்டும். யராவது தீங்கு செய்தால் பதிலுக்கு அவர்களுக்கு நல்லதையே செய்யவேண்டும். உதவிசெய்தவர்களுக்குப் பிரதி உதவி செய்வதில் உள்ளதை விடத் துன்பம் செய்தவர்களுக்கும் நன்மை செய்வதில்தான் நமக்குப் பெருமை இருக்கிறது. தீமைசெய்து துன்பத்துக்கு ஆளாக்கியவர்களுக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற உயர்ந்த மன நிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். யாராவது துன்பம் செய்தால், அது அப்போது அவருக்கிருக்கும் மனநிலையைப் பொறுத்தது. எனவே அவருக்கும் நன்மை செய்வதே நமது கொள்கையாக இருக்கவேண்டும். நமது மனப்பான்மை எப்படி உள்ளதோ அப்படியே தான் விளைவும் இருக்கும். நம்முடைய உணர்வுகள் நல்லவையாக இருந்தால் நமது செயல்களும் நல்லவையாகவே இருக்கும். மனம் நல்லதாக இருந்தால் நினைப்பவை, செய்பவை எல்லாமே தானாகவே நல்லவைகளாக அமைந்துவிடும் தீய எண்ணங்கள் இருந்தால் செயல்களும் தீயவையாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

கிரக தோஷங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது சாயிநாதனின் அனுக்கிரகமே

ஓம் ஸ்ரீ சாயி ராம் சோதிட நிபுணர்கள் கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையின் மேல் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறிவருகின்றனர். ஆனால் பகவான் பூர்வ ஜென்மஙங...